Friday, September 13, 2019

நாட்டை பொருளாதார மந்த நிலையிலிருந்து மீட்டிட 5 வழிகள் - மன்மோகன்சிங் பரிந்துரை


புதுடில்லி,செப்.13, நாட்டின் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீட்டிட அய்ந்து வழிகளை பொருளாதார வல்லுநரும், மேனாள் பிரதமரு மாகிய மன்மோகன்சிங் பரிந்துரைத்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் இந்தியப் பிரதமருமான மன்மோகன் சிங் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பொரு ளாதார மந்தநிலையை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதில், பணமதிப்பு நீக்கம் (Demonetisation) மற்றும் தவறாக நடைமுறைப்படுத்திய ஜிஎஸ்டி (Goods and Services Tax)
ஆகிய வற்றை மந்தநிலைக்கான முக்கிய காரணிகளாகச் சுட்டிக்காட்டிய அவர், அய்ந்து விதமான நடவடிக்கைகளை மேற் கொண்டு பொருளாதார வளர்ச்சியை மீட்க முடியும் எனக் கூறியிருக்கிறார்.

இந்த நடவடிக்கைகளுக்கு முன்பாக, முதலில் இந்த அரசு, நாடு பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அரசு துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தியுள்ளார். தற்போதுவரை நரேந்திர மோடி அரசு எந்த பொரு ளாதார விஷயத்திலும் முழுக் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை என விமர்சித்துள்ளார். ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் சாதகமாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பதை கைவிட வேண்டும். ஏற்கெனவே காலம் தாழ்ந்துவிட்டது. துறை வாரியாக, அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுக்கொண்டிருக்காமல் பொருளாதாரக் கட்டமைப்பை முன்னெடுத் துச் செல்ல முயற்சி செய்ய வேண்டும் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

1. ஜிஎஸ்டி (GST) விகிதங்கள் பொருத்தமான அளவுகளில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனால், சிறிது காலத்துக்கு மட்டுமே வருவாய் குறையும்.

2. விவசாயத்தில் புத்துயிர்ப்பை ஏற்படுத்தவும் கிராமப்புறங்களில் நுகர்வை (வாங்கும் சக்தியை) அதிகப்படுத்தவும் வழிகளை உருவாக்க வேண்டும். வேளாண் பொருட்களுக்கான சந்தை சுதந்திரமாக இருந்தால் பணம் மக்களிடம் தானாகப் போய்ச்சேரும்.

3. மூலதன உருவாக்கத்துக்காக பணப்புழக்கத்தை அதிகமாக்க வேண்டியது அவசியம்.

4. அதிகமான தொழிலாளர்களுடன் சம்பந்தப்பட்ட நெசவு, ஆட்டோமொபைல், மின்சாதனங்கள், குறைந்தவிலை வீடுகள் முதலிய துறைகளை புதுப்பிக்க வேண்டும். இதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கச் செய்ய வேண்டும்.

5. அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நிகழும் சூழலில், பிற நாடுகளில் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளைக் கவர வேண்டும்.

தற்காலிக பிரச்சினைகள் மற்றும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் இரண்டுக்குமே தீர்வு காண்பது அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த 3-4 ஆண்டுகளில் உயர்வான வளர்ச்சி விகிதத்தை மீண்டும் பெற முடியும்.

இப்போதுள்ள நிலையைப் பற்றிக் கூறும்போது, "இந்தியா மிக தீவிரமான பொருளாதார மந்தநிலையில் உள்ளது. கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதம் என்பது ஆறு ஆண்டுகளில் மிகவும் குறை வானது. கணிக்கப்படும் ஜிடிபி வளர்ச்சி விகிதமும் 15 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவாகவே இருக்கிறது. பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் பல முக்கிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன" என்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.