பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து 8.1.2012 அன்று நடத்திய மூன்றாம் ஆண்டு குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திராவிடர் திருநாளின் இரண்டாம்நாள் விழாவில் (16.1.2012) பெரியார் திரை விருதும் பரிசும் வழங்கப்பட்டன. யோசி என்ற குறும்படத்திற்காக இயக்குநர் ஜெ.பாலாவுக்கு பெரியார் திரை 2011 விருது, முதல் பரிசாக ரூ.10000 மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார். க.ராஜீ இயக்கிய இனி ஒரு விதி செய்வோம் இரண்டாம் பரிசாக ரூ.5000ம், ராஜாசேதுபதி இயக்கிய பேரன் மூன்றாம் பரிசாக ரூ. 3000 அசோக்குமார் இயக்கிய துவந்த யுத்தம் சிறப்புப் பரிசாக ரூ.1000 த.மணிமாறன் இயக்கிய ஜீன் 12 ல.ராஜ்குமார் இயக்கிய துண்டு ரெண்டு ஆகிய படங்கள் ஊக்கப் பரிசாக தலா ரூ. 500 பெற்றன. அனைவருக்கும் பரிசு சான்றிதழும் தமிழர் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டன.
முதல்பரிசு பெற்றவருக்கு விடுதலை சந்தாவும், மற்ற அனைவருக்கும் ஓராண்டு உண்மை சந்தாவும் அனைவருக்கும் கழக நூல்களும், ஏடுகளும் வழங்கப்பட்டன. பரிசுத் தொகையை வழங்கிய நன்கொடையாளர்கள் இரா.தமிழ்செல்வன், ரோட்டரி துணை ஆளுநர் தமிழ்ச் செல்வன், சபேசன், கோபால், ராமு, ஜெயவேல், மு.அ.கிரிதரன், கீழ்ச்சுரண்டை ஆறுமுகம் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.