Thursday, November 14, 2019

இந்து முன்னணியின் அராஜகம்

திருப்பூரில் "ஜிம்" பயிற்சி கூடத்திற்குள் புகுந்து பயிற்சியாளர் மீது இந்து முன்னணி கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தி யதில் பயிற்சியாளர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் பாண்டியன் நகர்ப்பகுதியில் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்திற்குட்பட்ட அம்மன் நகரில் "கவின் ஃபிட்னஸ் ஜிம்" என்ற உடற்பயிற்சி கூடத்தை ஜெயமுருகன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.இவரது உடற்பயிற்சிக் கூடத் தில் திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியைச் சார்ந்த வில்சன் டேனியல் (வயது 23) என்பவர் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் அப்பகுதியில் இருக்கும் இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த சிலர் உடற்பயிற்சி கூடத்தில் சேர வந்துள்ளனர்.பயிற்சியாளர் வில்சன் டேனியல் பயிற்சிக் கட்டணம் குறித்த நடைமுறையைக் கூறியுள்ளார்.இதுதொடர்பாக பயிற்சியாளர் வில்சன் டேனியலுக்கும்,இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இந்த முகாந்திரத்தின் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை பயிற்சியாளர் வில்சன் டேனியலை பொது இடத்தில் வைத்து இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் ஜாடை,மாடையாக தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியள வில் இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வெளியே வா,வெளியே வா என்று கூச்சலிட்டபடி  அத்துமீறி உடற்பயிற்சிக் கூடத்திற்கு நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.இதன் காரணமாக உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த நபர்கள் சிதறி வெளியேறியுள்ளனர்.
இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இக்கும்பலின் ஒருதரப்பினரான சந்தோஷ்,கார்த்தி,தமிழ், குட்டிவிஷ்வா, அருண், ஆறுச்சாமி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் பயிற்சியாளர் வில்சன் டேனியலை சூழ்ந்து கொண்டு மிரட்டியுள்ளனர்.அப்போது வெளியே இருந்து யாரும் உள்ளே வந்திராதபடி மற்றொரு தரப்பினர் சினிமாவில் ரவுடிக் கும்பல் அணிவகுத்து நிற்பதைப் போல் வழியை ஆக்கிரமித்து நின்றுள்ளனர்.பயிற்சியா ளர் வில்சன் டேனியலை சூழ்ந்து கொண்டிருந்த கும்பல் திடிரென அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இக்காட்சிகள் யாவும் அங்கு சம்பவம் நிகழ்ந்தபோது எடுக்கப்பட்ட காணொலிக் காட்சி பதிவுகள் மூலம் தெரியவருகிறது.
இந்து முன்னணி என்ற ரவுடிக் கும்பலால் தாக்கப்பட்ட "ஜிம்" பயிற்சியாளர் வில்சன் டேனியலுக்கு தலையில் பலத்த அடிபட்டதில் அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் அளித்த புகாரைப் பெற்றுக் கொண்ட திருமுருகன்பூண்டி காவல்துறையினர் இச்சம்ப வத்தில் தொடர்புடைய இந்து முன்னணியைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களில் 10 பேர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்து சந்தோஷ், ஆறுச்சாமி என்ற 2 பேரை மட்டுமே கைது செய்து உள்ளனர்.மற்றவர்களை தேடி வருவதாக கூறி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு நன்கொடை தரவில்லை என்ற காரணத்திற்காக கடந்த 5.9.2019 அன்று திருப்பூர் அங்கேரிபாளை யம் சாலை ஜீவா காலனியிலுள்ள வீ.கே.கார்மெண்ட்ஸ் என்ற பின்னலாடை நிறுவனத்திற்குள் புகுந்து இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த 60-க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதில் அங்கிருந்த தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.உடைமைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் அமைப்புகள்,அரசியல் சார்பற்ற அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரண்டு "இந்து முன்னணி என்ற அமைப்பை தடை செய்யவேண்டும்" என்ற ஒற்றை முழக்கத்தோடு இருபெரும் ஆர்ப்பாட்டங்களை திருப்பூரில் நடத்தியுள்ள நிலை யில் மீண்டும் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதி அம்மன் நகரில் 30-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்குள் புகுந்து சேதம் விளைவித்து,பயிற்சியாளரைத் தாக்கியுள்ள இச்சம்பவம் "இந்து முன்னணியை தடை செய்யக் கோரி" தொடர் போராட்டத்தை திருப்பூரில் தோற்றிவிக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.