Monday, April 22, 2019

மக்களவை தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை

இடைத்தேர்தலில் 11.56 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் 18 சட்ட மன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளி யாகியுள்ளது.
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக் கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல் வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை எடுத்தது.
அது மட்டுமல்லாமல் சனி, ஞாயிறு என 10 நாட்கள் சிறப்பு முகாம்களை நடத்தியது. இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி யும் மொத்தம் 71.90 சதவீதம் தான் வாக்குப்பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் மொத்தம் 5 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரத்து 767 வாக்காளர்கள் உள்ளனர்.


இதில் ஆண்கள் 2 கோடியே 88 லட்சத்து 96 ஆயிரத்து 279 பேர். 2 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரத்து 800 பேர் பெண்கள். 5688 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். ஆனால், இதில் 4 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 784 பேர் மட்டுமே வாக்களித் துள்ளனர். அதாவது, 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை. 18 சட்ட மன்றத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 47 லட்சத்து 32 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 23 லட்சத்து 40 ஆயிரத்து 553 பேர் ஆண்கள். பெண்கள் 23 லட்சத்து 91 ஆயிரத்து 706 பேர். மூன்றாம் பாலினத்தவர் 516 பேர். இதில் 75.56 சதவீதம் பேர் மட்டுமே, அதாவது 35 லட்சத்து 76 ஆயிரத்து 45 வாக்கா ளர்கள் மட்டுமே வாக்களித்துள் ளனர். இதில் ஆண்கள் 17 லட்சத்து 56 ஆயிரத்து  878 பேரும், பெண்கள் 18 லட்சத்து 19 ஆயிரத்து 91 பேரும், மூன்றாம்  பாலினத் தவர் 76 பேரும் அடங்குவர். ஆனால் ஆனால், 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்க வில்லை.

ராகுல் போட்டியிடும் வயநாடு உட்பட 115 தொகுதியில் 23ஆம் தேதி தேர்தல்


நாடுமுழுவதும் 3ஆம் கட்ட தேர்தலை சந்திக்க உள்ள 115 மக்களவை தொகுதிகளிலும், ஒடிசாவில் 42 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 23ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 11ஆம் தேதி நடந்தது. தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 95 தொகுதிகளில் கடந்த 18ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், அசாமில் 4, பீகாரில் 5, சட்டீஸ்கரில் 7, கோவாவில் 2, குஜராத்தில் 26, ஜம்மு காஷ்மீரில் 1, கருநாடகாவில் 14, கேரளாவில் 20, மகாராட்டிராவில் 14, ஒடிசாவில் 6, உத்தரப் பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 5, தத்ரா மற்றும் நகர்ஹ வேலியில் 1, டாமன் அண்ட் டையூவில் 1 என 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 115 மக்களவை தொகுதிகளில் வரும் 23ஆம் தேதி 3ஆம் கட்ட தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம், ஒடிசாவில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், கேரளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியும் அடங்கும்.

பயங்கரவாதத் தாக்குதல்களால் பலியானோர் பல மடங்கு அதிகரிப்பு

ராணுவ வீரர்களை சாகடித்த மோடி ஆட்சி!
முன்னாள் வீரர் தேஜ் பகதூர் குற்றச்சாட்டு!
வாரணாசி, ஏப். 21 பிரதமர் மோடியின் கடந்த 5ஆண்டு ஆட்சியில், இந்திய ராணுவம் சீர்குலைக்கப்பட்டு இருப்பதாக, முன்னாள் எல்லைப் பாதுகாப்புப்படை வீரரான தேஜ் பகதூர்யாதவ் குற்றம்சாட்டி யுள்ளார்.
அரியானா மாநிலம் ரேவரிமாவட் டத்தைச் சேர்ந்தவர் தேஜ்பகதூர் யாதவ். முன்னாள் எல்லைப்பாதுகாப்புப் படை வீரரான இவர்,கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரிமாதம் எல்லையில் பணியில் இருந்தபோது காணொலிக் காட்சிஒன்றை வெளியிட்டார்.
ராணுவ வீரர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என்றும் மூத்த அதிகாரி கள் உணவுப்பொருட்களைச் சட்டவிரோத மாக விற்பனை செய்கின்றனர் என்றும் அந்த காணொலியில் தேஜ் பகதூர் குற்றம் சாட்டியிருந்தார். இந்தக்காணொலி நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தவே, தேஜ்பகதூர், பாதுகாப்புப் படையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, கொதித்தெழுந்த தேஜ் பகதூர் ராணுவத்தை சீர்குலைத்த பிரதமர் மோடியை நாடு முழுவதும் அம்பலப்படுத் தப்போவதாக அறிவித்தார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்துப்போட்டியிடப் போகிறேன் என்றும் கூறிய அவர், தேர்தலில் ஜெயிப்பதோ, தோற்பதோ என்னுடைய நோக்கமில்லை; ராணுவ வீரர்கள் விஷயத்தில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது; ராணுவ வீரர்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்பதை அம்பலப்படுத்துவதே எனது நோக்கம் என்றும் பகிரங்கமாக தெரிவித்தார்.
அந்த வகையில், மோடி அரசுக்கு எதி ராக வாரணாசியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தேஜ் பகதூர், கடந்த அய்ந்தாண்டு ஆட்சியில், இந்திய ராணுவத்தின் மதிப்பை மோடி அரசு குலைத்து விட்டதுஎன்று குற்றம் சாட்டியுள்ளார்.
நமது நாட்டில் ராணுவத்தினருக்கு என்று ஒரு தனி மரியாதை உண்டு. ஆனால், அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே, கடந்த 2013ஆம் ஆண்டு, ராணுவ வீரர் ஹேம்ராஜ் கொலையை, மோடி அரசிய லாக்கினார். அவர் செய்த அரசியலை நம்பிய பலர், மோடி பிரதமராகி விட்டால், நம் நாட்டின் ராணுவம் வலிமையாகும் என்று நினைத்தார்கள். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பின்னர்தான், ராணுவம் படுமோசமான நிலைக்குபோயிருக்கிறது.
மோடி, ஆட்சியில் அமர்ந்தநாள் முதல், எதிரிகளால் கொல்லப்படும் ராணுவ வீரர் களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. கடந்த ஓராண்டில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மட்டும் எடுத் துக் கொண்டால், அது கடந்த 10 ஆண்டு களில் கொல்லப்பட்ட மொத்த வீரர்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல, கடந்த ஓராண்டில் தற்கொலை செய்து கொண்ட, துணை ராணுவப் படை வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 997 என்ற அளவிற்கு உயர்ந்திருக் கிறது. ஆனால், இவற்றை எல்லாம் ஊட கங்கள் கண்டுகொள்ளவில்லை. ராணுவத் தினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்து, நான் வீடியோ மூலம் வெளியே தெரிவித்த பின்னர், ராணுவ வீரர்கள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அநியா யங்களை மூடிமறைக்கவே முயற்சி நடக் கிறது. எனவே, ராணுவத்தை அரசியலாக் கிய நரேந்திர மோடிக்கு, தேர்தல் மூலமாக நாட்டு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வாரணாசியிலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு தேஜ் பகதூர் பேசி யுள்ளார்.

கையில் வைத்த ‘மை‘ அழிந்ததால், வழக்கு தொடுத்த வாக்காளர்

பெங்களூருவை சேர்ந்தவர் பிரிக்சித் தலால் (வயது 43). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் அவர் நேற்று முன்தினம் பெங்களூரு மாநகராட்சி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
இதற்காக அவரது கை விரலில் ஊழியர்கள் வைத்த 'மை', அவர் வீட்டுக்கு வந்து சாப்பிடுவதற்காக கையை சோப்பு போட்டு கழுவிய போது அழிந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தான் வாக்களித்த வாக்குச்சாவடிக்கு சென்று 'மை' அழிந்தது பற்றி அங்கி ருந்த அதிகாரிகளிடம் பிரிக் சித் தலால் கூறினார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் காவல் நிலையத் துக்கு சென்று தேர்தல் ஆணை யத்தின் மீது அவர் புகார் கொடுத்தார். அதில், வாக்க ளித்த பின் விரலில் வைக்கப் படும் 'மை' குறைந்தது இரண்டு வாரங்கள் அழியாமல் இருக் கும். ஆனால் தனது விரலில் வைக்கப்பட்ட 'மை' உடன டியாக அழிந்து விட்டது, எனவே தேர்தல் ஆணையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில், காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Friday, January 18, 2013

”மாற்றம் தந்த இந்திய சினிமா” திரையிடல்


”மாற்றம் தந்த இந்திய சினிமா” திரையிடல்

படம்: “வாட்டர்” / இயக்கம் : தீபா மேத்தா

ஜனவரி 19 - சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு - பெரியார் திடல், சென்னை-7

Monday, January 7, 2013

பெரியார் திரை குறும்படப் போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.



போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: ஜனவரி 20, 2013

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நான்காம் ஆண்டாக நடத்தும்  பெரியார் திரை குறும்படப் போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

போட்டிக்கான விதிமுறைகள்: 

1. பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப்  பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல் வேண்டும்.

2. குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitle)  இருப்பின் நலம். தரமான DVD அல்லது CD வடிவில் குறும்படத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.

3. ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

4. இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos)   மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன. 

6. போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். (அல்லது) போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

7. போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் அனைத்தும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை நடத்தும் திரையிடல் நிகழ்வுகளில் திரையிடப்படும்.

8. குறும்படங்கள் 2010-2012 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.

9. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

10. போட்டி முடிவுகள் விடுதலை, உண்மை இதழ்களிலும் பிற நாளிதழ்களிலும் செய்தியாக 2013 ஜனவரி இறுதியில் வெளியிடப்படும். 

11. ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

12. தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.

13. விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை    www.viduthalai.in,  www.periyarthirai.blogspot.com  ஆகியவற்றில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

14. போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை.

15. போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: ஜனவரி 20, 2013


முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000


மேலும் தொடர்புகளுக்கு:

செல்பேசி: 9444210999, 9940489230


periyarthirai@gmail.com




அனுப்ப வேண்டிய முகவரி:

அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, 
வேப்பேரி, சென்னை-7




படைப்புலகம் என்பது இன்று காட்சி வடிவிலானதாக மாறியிருக்கிற சூழலில், இளைஞர்களிடமும், முற்போக்குச் சிந்தனையாளர்களிடமும் அதற்கான ஆர்வமும், முனைப்பும் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் வெகு சாதாரணமான நகரங்களிலும், கிராமங்களிலும் கூட குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் குறித்த விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. அவற்றில் முற்போக்குப் சிந்தனைகளையுடைய குறும்படங்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.

ஜாதி - மத ஒழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு உள்ளிட்ட தலைப்புகளில் எடுக்கப்படும் குறும்படங்களின் படைப்பாளிகள் பிற்காலத்தில் நல்ல பல படைப்புகளை கொள்கை உணர்வோடு தரவல்லவர்களாக இருக்கிறார்கள். 

தங்களின் சொந்த முயற்சியில் படைப்பை வெளிக்கொண்டு வரும் அவர்களுக்கு, திரையிடல் வாய்ப்புகளை வழங்கி ஊக்கம் அளிக்கவும், அவர்களை ஆற்றுப்படுத்தி,  திரைத் துறையில் ஏற்கெனவே இயங்கி வரும் படைப்பாளிகளோடு இணைப்பை ஏற்படுத்தித் தந்து புதிய இளைய தலைமுறை படைப்பு வட்டத்தை உருவாக்கிடவும் சரியானதொரு களம் தேவைப்பட்டு வந்தது. அந்தத் தேவையை நிறைவு செய்யும் விதமாகத்தான் கடந்த 8.11.2008 அன்று பெரியார் திடலில் மணியம்மையார் அரங்கில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் சீரிய சிந்தனையில் தோன்றி, அதை செயல்படுத்த, அவரே தலைமையேற்று, பாவலர் அறிவுமதி முன்னிலையில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை தொடங்கப்பட்டது.

 கடந்த நான்காண்டுகளில் சென்னை பெரியார் திடலில் மட்டும் 55திரையிடல்கள் நிகழ்த்தப்பட்டன.

 இவற்றில் 67 குறும்படங்களும், 19 ஆவணப்படங்களும் திரையிடப்பட்டுள்ளன. இது தவிர, வட சென்னை, குற்றாலம், காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாம்களிலும்,  திருச்சி, மதுரை, பொன்னமராவதி, காரைக்குடி போன்ற நகரங்களிலும் திரையிடல்கள் நிகழ்த்தப் பெற்றுள்ளன. மேலும் ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம், குறும்பட வெளியீடு, பெரியாரியல் பரப்பும் புதிய குறும்படங்கள் தயாரிப்பு என இதன் பரப்பும் விரிந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களின் திரையிடல்களுக்கு படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி அவர்களின் படங்களுக்குரிய அங்கீகாரம் பெற்றுத் தருதல் என இதன் செயல்பாடு தொடர்கிறது.

தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையைத் தொடங்கிடவும், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அளவில் குறும்பட ஆவணப்படப் போட்டிகள் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்தகைய முயற்சியின் பயனாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற பெரியார் திரை குறும்படப் போட்டியில் 150-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அனைவரின் வரவேற்பையும் பெற்ற யோசி சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசான ரூ.10000 மற்றும் பெரியார் திரை குறும்பட விருது 2011யும் பெற்றது. இனி ஒருவிதி செய்வோம், பேரன், துவந்த யுத்தம் ஆகியவை முறையே இரண்டாம் (ரூ.5000), மூன்றாம் (ரூ.3000) மற்றும் சிறப்புப் பரிசுகள் (ரூ.1000) பெற்றன. அதன் தொடர்ச்சியே இவ்வாண்டும் அறிவிக்கப்பட்டுள்ள 2012-ஆம் ஆண்டுக்கான பெரியார் திரை குறும்படப் போட்டி  ஆகும்.

மாதந்தோறும் நடைபெறவுள்ள திரையிடல்களுக்கும் தங்கள் படைப்புகளை அனுப்பி, உலகின் பார்வைக்கு வைக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நம் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திரையிடலும் அதனைத் தொடர்ந்து படைப்பாளியுடன் கலந்துரையாடலும் நிகழும். திரையிடல் என்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஊடகங்களுக்கும் இளைஞர்களைத் தயாரிக்கும் பரந்த நோக்கோடும் இம்முயற்சி நடைபெற்று வருகிறது.